இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் சடலம் நீதிபதியின் முன்னிலையில் தோண்டப்பட்டது!
-யாழ் நிருபர்-
மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விபத்து வழக்கொன்றில், தொடர்புடைய நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர், கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது..
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன்பின்னர், நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த நிலையில், கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டார்.
அதன்பின் கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இது இவ்வாறு இருக்கையில், குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.
குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்தவகையில், சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால், இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.
அந்தவகையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,, இன்றையதினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார், பிரதேச சபையினர், மன்னார் பொலிஸார், மானிப்பாய் பொலிஸார், கிராம அலுவலர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் சடலம் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்ட சடலம், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.