இந்திய இழுவைப்படகு அடாவடி: யாழ். சுழிபுரம் மீனவர்களின் வலைகள் நாசம்
-யாழ் நிருபர்-
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மீனவர் புதன் கிழமை இரவு திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. இதனால் அவரிடம் இருந்து 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஆறு வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில்,
நேற்றிரவு 10 மணியளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன. இப்பொழுது மீன்பிடி பருவகாலம். இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்தியன் இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன், வங்கி கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கின்றேன்.
புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கின்றார். அதுபோல இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் எனக்கு இழப்பீட்டினை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்