
இது நடந்திருக்கக் கூடாத ஒன்று -ஜனாதிபதி-
தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக கொழும்பிற்கு வந்த பேருந்துகள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கண்டித்துள்ளார். மேலும் பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். பேருந்துகளை அங்கு நிறுத்த அனுமதித்த ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதை ஆதரித்த தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் “இது நடந்திருக்கக் கூடாத ஒன்று” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பேருந்திற்கும் பொறுப்பாக ஒரு அமைப்பாளர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் , அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட குறிப்பிட்ட பேருந்துகளுக்குப் பொறுப்பான அமைப்பாளர்களின் பட்டியலைத் தான் கேட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.