
இடமாற்றப்பட்ட கணித ஆசிரியரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது: மக்கள் போராட்டம்
கொழும்பு – பம்பலப்பிட்டி பெண்கள் பாடசாலை மாணவியின் மரணத்திற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியரை கொழும்பிலிருந்து புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
குறித்த போராட்டம் புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
டில்ஷி அம்ஷிகா எனும் மாணவி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், சந்தேக நபராக கருதப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
மேற்படி இடமாற்றம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் கடந்த 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இடமாற்றம் தொடர்பாக கொழும்பு – மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மற்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் குறித்த இரண்டு அதிபர்களுக்கும் கடிதத்தின் பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாரிய குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய கணித பாட ஆசிரியரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தி புத்தளம் மக்களால் மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.