அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றிய டிப்பரை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு, சட்டவிரோதமான முறையில் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தி மூலமாக, சட்டவிரோதமான முறையில் கண்டகற்களை அகழ்ந்து செல்வதாக, பிரதேச மக்களால் முறைப்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரனுக்கு கிடைக்கப் பெற்றது.

அதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில், நுணாவில் பகுதியில் வைத்து குறித்த வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியை மறித்து சோதனையிட்ட போது, அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸார் மேலதிக விசாரகைளை முன்னெடுத்துள்ளனர்.